காரைக்குடி, அக்.1: காரைக்குடி காளவாய்பொட்டல் பகுதியில் உள்ள வீடுளை சுற்றி குளம் போல் தண்ணீர் தேங்கி மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். காரைக்குடி 30வது வார்டுக்கு உட்பட்ட காளயப்பா நகர் பெரியார் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலை என்பதே கிடையாது. மழை பெய்தால் தண்ணீர் வெளியேறுவதற்கு உரிய கால்வாய்கள் இல்லை. ஒவ்வொரு வருடமும் மழை பெய்யும் போதும் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக பெய்த சாதாரண மழைக்கே குடியிருப்பை சுற்றி குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வீட்டுக்குள் இருந்து மக்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தவிர விஷபூச்சிகள் வீட்டுக்குள் நுழைவதால் பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தொடர்ந்து தண்ணீர் தேங்கி கழிவுநீர் போல மாறி கடும் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது.