மாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.20 ஆயிரத்து 474 கோடியே 53 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்

கோவை, மார்ச்.20:  கோவை மாவட்டத்தில்  நபார்டு வங்கி மூலம் 2020-2021ம் ஆண்டிற்கு ரூ.20 ஆயிரத்து 474 கோடியே 53 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கலெக்டர்  ராஜாமணி  தெரிவித்துள்ளார்.

கோவை  மாவட்ட  கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நேற்று  2020-2021ம் ஆண்டிற்கான கோவை மாவட்ட வங்கிகளின் வருடாந்திர கடன் திட்ட  அறிக்கையினை மாவட்ட  கலெகடர் ராஜாமணி வெளியிட்டார். இப்புத்தகத்தின் முதல் பிரதியை கனரா வங்கி துணைப் பொது மேலாளர்  ரமேஷ்  பெற்றுக்கொண்டார். பின்னர்  மாவட்ட  கலெக்டர் ராஜாமணி தெரிவித்ததாவது:ஓவ்வொரு ஆண்டும் நபார்டு வங்கி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வளம் சார்ந்த வங்கி கடன் திட்டத்தை தயாரித்து வெளியிடுகிறது. அதனடிப்படையில் தமிழகத்திலேயே மிகவும் அதிகபட்சமாக ரூ.20 ஆயிரத்து 474 கோடியே 53 லட்சம் கோவை மாவட்டத்தில் வங்கிகளின் மூலம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்டமானது நபார்டு வங்கியின் உத்தேச கடன் இலக்கை ஆதாரமாய் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.2020-2021ம் வருடத்திற்கான கடன் திட்டத்தில் விவசாயத்திற்கு ரூ.7 ஆயிரத்து 611 கோடியே 12 லட்சமும், சிறு குறு நடுத்தர தொழில் மையத்திற்கு ரூ.9 ஆயிரத்து 54 கோடியே 61 லட்சமும், இன்னும் பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.3 ஆயிரத்து 808 கோடியே 80 லட்சமும் என ஆக மொத்தம் ரூ.20 ஆயிரத்து 474 கோடியே 53 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.1049.53 கோடி அதிகம் என்பது குறிப்பிடதக்கது.  இவ்வாறு கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: