சங்கரன்கோவில், மார்ச் 19: சங்கரன்கோவிலில் குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கரன்கோவில் திருவள்ளுவர் நகர் பகுதியில், 16 நாட்கள் ஆகியும் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த முறை குடிநீர் விநியோகித்த போது, ராஜபாளையம் சாலையில் பல்வேறு பணிகளுக்காக குழிகள் தோண்டியதால், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அது சரிசெய்யப்பட்டு வழக்கத்தைவிட 3 நாட்கள் கழித்தே குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது 16 நாட்கள் ஆன நிலையில், மீண்டும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், 4 நாட்கள் கழித்தே குடிநீர் விநியோகிக்கப்படும் என்றும் நகராட்சி தெரிவித்து உள்ளது.
மேலும் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. ஆனால் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இப்பகுதியில், பெரும்பாலானோருக்கு குடிநீர் கிடைக்கவில்லை.