வால்பாறை, மார்ச் 18: வால்பாறையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய ரேஷன் கடை, வீடுகளை உடைத்து உணவு தேடி வருகிறது. இதனால், அப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந் நிலையில், வால்பாறையை அடுத்துள்ள உப்பாசி எஸ்டேட்டில் சித்திக் என்பவர் டீ கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை யானை, டீ கடையை உடைத்து உணவு தேடியது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், ஒன்று சேர்ந்து யானையை வனத்திற்குள் விரட்டினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.