கோவை, மார்ச் 17:கோவை மாவட்டத்தில் போலியான மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டி கட்டிட வரைவு அனுமதி பெற்று விதிமுறை மீறுவது அதிகமாகி விட்டது. கோவை மாவட்டத்தில் கடந்த 2002ம் ஆண்டில் மழை நீர் சேகரிப்பு திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அரசு, தனியார் கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு தொட்டி கட்டவேண்டும். கல், மணல், வடிப்பான் என மூன்று நிலையில் நீர் சேகரித்து தெளிந்த நீரை தொட்டி அல்லது நிலத்தில் சேகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மழை காலங்களில் கட்டிடங்களின் மொட்டை மாடியில் தேங்கும் மழை நீரை வடிகாட்டி, நிலத்தடி நீர் தொட்டியில் சேகரிக்கலாம். மழை நீரை பயனுள்ள வகையில் சேகரிக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த திட்டம் துவக்கப்பட்டது. மாவட்ட அளவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டது. நகர் பகுதியில் பொது இடங்கள், ரோட்டை சேதப்படுத்தி சிலர் மழை நீர் கட்டமைப்பு உருவாக்கியதால் சர்ச்சை ஏற்பட்டது. திட்டம் துவங்கிய ஓரிரு ஆண்டுகளில் மழை நீர் கட்டமைப்பில் தீவிரம் இருந்தது. பிறகு படிப்படியாக இந்த திட்டம் முடங்கியது. கடந்த 2013ம் ஆண்டில் மழை நீர் கட்டமைப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டினால் மட்டுமே கட்டட அனுமதி வழங்கப்படும், சொத்து வரி, குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என உள்ளாட்சி நிர்வாகங்கள் தெரிவித்தது. மழை நீர் தொட்டி அருகே வீட்டின் உரிமையாளர் நின்று போட்டோ எடுத்து அதை உள்ளாட்சி நிர்வாகத்தில் காட்டினால் மட்டுமே சொத்து வரி விண்ணப்பங்கள் ஏற்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கழிவு நீர் தொட்டியில் குழாய் மாட்டி போலியாக மழை நீர் கட்டமைப்பை காட்டி பலர் கட்டிட அனுமதி மற்றும் சொத்து, குடிநீர் இணைப்பு பெற்று வருகின்றனர்.