பண்ருட்டி, மார்ச் 13: நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராசேந்திரன் சட்டப்பேரவையில் பேசியதாவது:நெய்வேலி தொகுதி கீழகுப்பம் ஊராட்சியில் உலர்களம் அமைத்திட வேண்டும். கீழகுப்பம், நடுகுப்பம், மருங்கூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் விளைந்திடும் முந்திரி கொட்டைகளை உலர வைப்பதற்கு உலர் களம் தேவைப்படுகிறது. மானாவாரி பயிர்களான உளுந்து, கொள்ளு, கேழ்வரகு போன்ற பயிர்களை அறுவடை செய்யும்போது அவற்றை உலர வைப்பதற்கு போதிய இடமின்றி விவசாயிகள் அவதிப்படுகின்றனர். உலர் களம் அமைப்பதற்கான அரசு நிலம் கீழகுப்பம் பகுதியில் உள்ளது. 1000 விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் உலர்களம் அமைத்து தரவேண்டும், கடலூர் மாவட்டத்தில் முந்திரி அதிகளவு பயிரிடும் பகுதி பண்ருட்டி ஒன்றிய பகுதியாகும். நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர், தோட்டகலை விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக முந்திரிக்காக சிறப்பு மையத்தை கடலூர் மாவட்டத்திற்கு அறிவித்துள்ளார்.