கரூர் அருகே வெவ்வேறு சம்பவம் பெண், விவசாயி தற்கொலை

கரூர், மார்ச் 13: கரூர் மாவட்டம்  வெள்ளியணை அருகே மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டம் வெள்ளியணை அடுத்துள்ள முஷ்டகிணத்துப்பட்டியை சேர்ந்தவர் காந்திமதி(55). கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதித்த நிலையில் காந்திமதி வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 18ம்தேதி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இறந்தார். இந்த சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

விவசாயி தற்கொலை: திருச்சி மாவட்டம் தொட்டியத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(60). இவர், மனைவியை பிரிந்து கரூர் லாலாப்பேட்டை மேட்டுமகாதானபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் பல ஆண்டுகளாக தங்கியிருந்தார். இந்நிலையில் சில ஆண்டுகளாக அல்சர் நோயால் அவதிப்பட்டு வந்த இவர், சிகிச்சை பெற்றும் பலனில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், விரக்தியடைந்த அவர் கடந்த 11ம் தேதி அன்று வீட்டில் யாருமில்லாத சமயத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் புகாரின் பேரில் லாலாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: