நாமக்கல், மார்ச் 13: நாமக்கல் மாவட்டத்தில், பூட்டிய வீடுகளை உடைத்து நகை திருடிய 2 மர்ம ஆசாமிகளை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 33 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே அணியாபுரம்புதூரை சேர்ந்தவர் சுப்பரமணியம். இவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த சுமார் 15 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். திருச்செங்கோட்டை அடுத்த கொசவம்பாளையம், எஸ்.எஸ்.நகரில் பூட்டியிருந்த பாலமுருகன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ₹5ஆயிரம் ஆகியவை திருடுபோனது. மேலும், கருவேப்பம்பட்டி ஜெயசக்தி சிட்டி நகரை சேர்ந்த சவிதா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த சுமார் 3 பவுன் நகைகள், 6 ஜோடி வெள்ளி கொலுசுகள், நாமக்கல் மாருதி நகரைச் சேர்ந்த சுகந்தி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 2 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் திருடு போனது.