முத்துப்பேட்டை, மார்ச் 13: வருகிற 26, 27ம்தேதி மன்னார்குடியில் நடைபெறும் மாநில மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொள்வது என்று அனைத்து சமய நிலங்களில் குடியிருப்போர் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அனைத்து சமய நிறுவன நிலங்களில் குடியிருப்போர், சாகுபடியாளர்கள் கூட்டமைப்பு கூட்டம் மாவட்ட அமைப்பு குழு உறுப்பினர் கனகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் ரெகுபதி முன்னிலை வகித்தார். இதில் மாநில அமைப்பாளர் சாமி நடராஜன் கலந்துக்கொண்டு பேசினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கோயில் இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்ககோரி வரும் 26, 27ம் தேதி மன்னார்குடியில் நடைபெறும் மாநில மாநாட்டில் அதிகளவில் கலந்து கொள்வது. கோவில் இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்ககோரி முத்துப்பேட்டை பேரூராட்சி அருகில் இன்று மார்க்சிஸ்ட் சார்பில் நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தில் அதிகளவில் பங்கேற்பது. கோயில் இடங்களில் குடியிருந்து வரும் மக்களுக்கு இதுநாள்வரை எந்தவித அரசு நிவாரணமும் கிடைக்கவில்லை.