தண்டராம்பட்டு, மார்ச் 12: தண்டராம்பட்டு அருகே பெண் விவசாயி வீட்டில் 60 சவரன், ₹10 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மனைவி படவேட்டாள்(58), விவசாயி. இவர்களது மகள் ஜெயக்கொடி, மகன் அன்பழகன். இவரது மனைவி விஜயசாந்தி. அர்ஜூனன், அன்பழகன் ஆகியோர் இறந்துவிட்டனர். இதனால் விஜயசாந்தி, ஜெயக்கொடி, படவேட்டாள் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் படவேட்டாள் உட்பட 3 பேரும், வீட்டை பூட்டி கொண்டு அருகே உள்ள விவசாய நிலத்தில் நெல் அறுவடை செய்ய சென்றனர். வேலை முடிந்ததும் இரவு 8 மணியளவில் வீட்டிற்கு வந்த 3 பேரும், உணவு சாப்பிட்டு விட்டு ஹாலில் படுத்து தூங்கினர்.
நேற்று காலை 5 மணியளவில் எழுந்து பார்த்தபோது, வீட்டின் 3 அறைகளில் இருந்த 3 பீரோக்களும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பீரோக்களை பார்த்தபோது, அதில் இருந்த 60 சவரன் நகை, ₹10 லட்சம் ஆகியன திருட்டு போனது தெரிந்தது.