கோவை, மார்ச் 10: கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய் பாதிப்பு 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக கோவை அரசு மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் கர்ப்பகால சர்க்கரை நோய் தினம் நேற்று நடந்தது. இதில், கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன், மருத்துவ கண்காணிப்பாளர் சடகோபன் உள்பட அனைத்து துறை மருத்துவர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், கர்ப்ப காலத்தில் ஏற்படும் சர்க்கரை நோய் பாதிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், அரசு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பகால சர்க்கரை ேநாய் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. இது குறித்து மருத்துவமனையின் நீரிழிவு நோய் துறைத்தலைவர் டாக்டர் வெண்கோ ஜெயபிரசாத் கூறியதாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச் 10ம் தேதி கர்ப்பகால சர்க்கரை நோய் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் கருவுற்ற தாய்மார்களில் 2 முதல் 3 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருந்தது. இது தற்போது 15-20 சதவீதமாக அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஐந்தில் ஒரு தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.