பாடாலூர், மார்ச் 10: ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி கிராமத்தில் புதிதாக திறக்கப்பட இருந்த மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க திறப்பு விழாவிற்கு 3 மணி நேரத்திற்கு மேலாகியும் கலெக்டர் வராததால் அலுவலர்களும், பொதுமக்களும் காத்து கிடந்தனர்.உலக மகளிர் தின விழா மார்ச் 8ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி கிராமத்தில் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் திறப்பு விழாவும், மகளிர் தின விழாவும் கொண்டாடப் படுவதாக அறிவிக்கப்பட்டு விழா ஏற்பாடுகள் நடைபெற்றது. நேற்று காலை 10 மணிக்கு புதிய மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் திறக்கப் படும் என அறிவிக்கப் பட்டு அரசு அலுவலர்களும், பொதுமக்களும் பெண்களும் விழா நடைபெறும் இடத்தில் காலை 9 மணிக்கு வந்து விட்டனர்.