ஆட்டையாம்பட்டி, மார்ச் 10: ஆட்டையாம்பட்டியில் கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாய் உடைந்ததால் வெளியேறிய காவிரி நீர் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இடைப்பாடி அருகே காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து, இடைப்பாடி - ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம், வெண்ணந்தூர் மற்றும் ராசிபுரம் ஆகிய பகுதிகளுக்கு காவிரி குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர். இத்திட்டத்தில் கண்டர்குல மாணிக்கம் பகுதியில் இருந்து நீருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கூட்டு குடிநீர் திட்டத்தில் வெண்ணந்தூர் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் பிரதான குழாய் நேற்று மதியம் திடீரென உடைந்து, சாலையை பெயர்த்துக்கொண்டு தண்ணீர் வெளியேறி ஆறாக ஓடியது. பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது. இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், குடிநீர் செல்வதை நிறுத்தியுள்ளனர். வெண்ணந்தூர் குடிநீர் குழாய் செல்லும் வழியில், சாக்கடை அமைக்கப்பட்டு உள்ளதால், குடிநீர் குழாயை சரி செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.