அதிராம்பட்டினம், மார்ச் 6: அதிராம்பட்டினம் கடலோர பகுதியில் மருத்துவ குணம் வாய்ந்த வரிமட்டி சீசன் துவங்கியுள்ளது. இதன் விற்பனையில் அதிகளவில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடலோர பகுதிகளில் வரிமட்டி சீசன் துவங்கியுள்ளது. நத்தை இனத்தை சேர்ந்த வரி மட்டி, வாழி மட்டி, வழுக்கு மட்டிகள் என பல வகைகள் உண்டு. அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் ஆகிய கடலோர கிராம பகுதிகளில் வசிக்கும் மீனவ பெண்கள் தினம்தோறும் காலை நேரங்களில் மட்டிகளை வாங்கி வந்து அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். மட்டியின் சதைப்பகுதியை வறுத்தும், அவியல் செய்தும் சாப்பிடுவர். வரிமட்டியை கொண்டு தயாரிக்கப்படும் பிரியாணி சுவையாக இருக்கும். ஒரு மரக்கால் அளவில் வரிமட்டி ரூ.150க்கு விற்பனை செய்கின்றனர். இந்த வியாபாரத்தில் பெண்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.