திருச்செங்கோடு, மார்ச் 6: திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில், மாசி குண்டம் திருவிழாவை முன்னிட்டு நேற்று தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயிலில், மாசி குண்டம் திருவிழா, கடந்த 28ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செங்கோடு மலையடி குட்டையில் இருந்து புனிதநீர் எடுத்து, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். தீர்த்தத்தை கொண்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சக்தி அழைப்பு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி விழா வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது.