குளச்சல், மார்ச் 6: மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா கடந்த 1ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 5ம் நாளான நேற்று மாலை மணவாளக்குறிச்சி இந்திய அபூர்வ மணல் ஆலை தொழிலாளர்கள் சார்பில் யானை மீது சந்தனக்குடம் பவனியாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. 6 ம் நாள் கொடையை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முக்கிய வழிபாடான மகா பூஜை எனப்படும் வலியப்படுக்கை பூஜை நடக்கிறது. இந்த பூஜையின் போது அம்மனுக்கு மிகவும் பிடித்த கனி வகைகள், இனிப்பு பதார்த்தங்கள் உள்ளிட்டவற்றை அம்மன் முன்பு பெரும் படையலாக படைத்து அம்மனை வழிபடுவார்கள். மாசிக்கொடையின் 6 ம் நாளன்றும், மீனபரணி கொடையன்றும், கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்றும் வருடத்திற்கு 3 முறை மட்டும் இந்த வலியபடுக்கை பூஜை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. வலியப்படுக்கையை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு திருநடை திறப்பு, 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல் நடக்கிறது.