காரைக்குடி, மார்ச் 3: காரைக்குடியில் கோடை காலம் துவங்கும் முன்பே இளநீர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. காரைக்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கோடை வெயில் துவங்கும் முன்பே வெயில் வாட்டி வதைக்கிறது. தற்போது கோடைக்கு இதமான தாகம் தணிக்கும் இளநீர், தர்பூசணி, பனை நுங்கு, வெள்ளரிக்காய் போன்ற இயற்கையான உணவு பொருட்களையே மக்கள் பெரிதும் வாங்கி பயன்படுத்துகின்றனர்.கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லை. இதனால் தென்னை மரங்களுக்கும் சரிவர நீர் பாய்ச்சாததால் விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன் சிறிய அளவிலான இளநீர் 15 ரூபாய்க்கும், கொஞ்சம் பெரிய அளவிலான இளநீர் 20 ரூபாய்க்கும் விற்றது. தற்போது கோடைகாலம் துவங்கும் முன்பே சிறிய இளநீர் 30 ரூபாய்க்கும், நடு ரகம் இளநீர் 40 க்கும், பொள்ளாச்சி போன்ற வெளியூர்களில் இருந்து வரும் இளநீர் 50 ரூபாய்க்கும் விற்க்கப்படுகிறது. இதனால் இளநீர் விரும்பிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.