சென்னை: வேளச்சேரியை சேர்ந்த பிபிஏ பட்டதாரி ரவி (37), தவணை கட்டாத வாகனங்களை சீஸ் செய்து வரும் வேலை செய்துவந்துள்ளார். இதனால் இவருக்கு சீசிங் ரவி என்ற பெயர் ஏற்பட்டது. வாகனங்களை வாங்கி விற்பதில் தி்லலுமுல்லு செய்ததால், அவரை நிறுவனத்தின் புகாரின் பேரில் கைது செய்த போலீசார், சென்னை புழல் சிறையில் அடைத்தினர். அப்போது சிறையில் இருந்த பாண்டியராஜனுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த ரவிக்கு, லட்சக்கணக்கில் கடன் இருந்துள்ளது.
இதுகுறித்து நண்பன் பாண்டிராஜனிடம் தெரிவித்தார். இதையடுத்து இருவரும் பணத்துக்காக இருசக்கர வாகனங்களை திருடி விற்றுள்ளனர். மேலும் தனியாக நடந்து செல்பவர்களிடம் நகை பறிப்பு, செல்போன் கடையில் மொபைல் திருடுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் பல இடங்களில் இருவரும் கைவரிசை காட்டியுள்ளனர். அவ்வாறு கொள்ளையடித்த பணத்தை கொண்டு, மனைவியை பிரிந்த இருவரும், ஜாலியாக செலவு செய்து வாழ்ந்து வந்துள்ளனர். திருச்செங்கோடு, பள்ளிபாளையம், ஈரோடு, சித்தோடு, கோபி உள்ளிட்ட பல இடங்களில் வழிப்பறி, கொள்ளையின் போது சிசிடிவி கேமரா பதிவுகளில் இவர்கள் இருவரும் இருந்தது தெரியவந்தது. ஆனால் சிக்கவில்லை. இந்நிலையில் திருச்செங்கோட்டில் வாகன சோதனையின் போது இருவரும் போலீசில் சிக்கி உள்ளனர்.