ஊழியர்களை கட்டிப்போட்டு பர்னிச்சர் கடையில் திருட்டு

கோவை, மார்ச் 1: கோவை அருகே ஊழியர்களை கட்டிப்போட்டு பர்னிச்சர் கடையில் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். கோவை அருகேயுள்ள சிறுமுகை எஸ்.எஸ். நகரைச் சேர்ந்தவர் முஸ்தபா(51). இவர் அதே பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். கடை முன்பு தொழிலாளர்கள் சுந்தரலிங்கம் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் படுத்திருந்தனர். நள்ளிரவில் அங்கு திருடுவதற்காக மர்ம நபர்கள் வந்தனர். அப்போது சத்தம் கேட்டு எழுந்த சுந்தரலிங்கம், ஈஸ்வரன் ஆகியோரை அடித்து மிரட்டி அங்குள்ள ஒரு தூணில் கட்டி வைத்தனர். பின்னர் கடைக்குள் புகுந்து கட்டில், டைனிங் டேபிள், பீரோ உட்பட ரூ.1.7 லட்சம் மதிப்பிலான பொருட்களை வேனில் ஏற்றிக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: