ஈரோடு, மார்ச் 1: ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாயம், சலவை, பிரிண்டிங் மற்றும் தோல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவிரி ஆற்றில் சாக்கடை கழிவுநீருடன் தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சேலம் மாவட்ட தலைமை சுற்றுச்சூழல் இணை பொறியாளர் மதிவாணன் தலைமையில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் ஈரோடு உதயகுமார் அதிகாரிகள் குழுவினர் காவிரி ஆற்றின் கரைகளில் குமாரபாளையம் முதல் வெண்டிபாளையம் வரை ஆய்வு மேற்கொண்டனர். இந்த பகுதிகளில் காவிரி ஆற்றில் ஓடும் நீர் எடுக்கப்பட்டு உப்பின் அளவு (டிடிஎஸ்) கண்டறியப்பட்டது. அதில் உப்பின் அளவு 290 மில்லி கிராம் இருப்பது தெரிய வந்தது. மேலும் இந்த நீர் பொதுமக்கள் குடிப்பதற்கு பயன்படுத்த நிர்ணயிக்கப்பட்ட தர அளவிற்குள் உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.