நெய்வேலி, பிப். 28: டாஸ்மாக் கடையால் விபத்துகள் தொடர்வதால், கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். வடலூர் அடுத்த சிப்காட் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தமிழக அரசு மதுபான கடையை கொண்டு வந்தது. இந்த மதுபான கடை வடலூரில் இருந்து மந்தாரக்குப்பம் செல்லும் சாலை வீணங்கேனி பாலம் சிப்காட் பின்புறம் அமைந்துள்ளது. இந்த டாஸ்மார்க் கடை அருகே பத்துக்கும் மேற்பட்ட சிப்காட் நிறுவனங்களில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் பார்வதிபுரம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் கடையின் அருகில் வசித்து வருகின்றனர். இந்த மதுபான கடைக்கு செல்ல பாதை இல்லாததால் சுரங்கத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் உபரி நீர் வாய்க்காலை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து மண் அடித்து புதிய சாலையை அமைத்துள்ளனர். டாஸ்மாக் கடையின் அருகில் அரசு அனுமதி இல்லாமல் பார் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் குடிமகன்கள் குடித்துவிட்டு போதை தலைக்கேறியதும் கடலூர்-சேலம் சாலை சிப்காட் பகுதியை கடக்கும்போது குடிமகன்கள் தொடர் விபத்துகளில் சிக்குவது தொடர் கதையாகி வருகிறது.