பூதப்பாண்டி, பிப்.28: தடிக்காரன்கோணத்தில் ஆசிரியை வீடு புகுந்து மூன்றே கால் பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.பூதப்பாண்டி அருகே தடிக்காரன்கோணம், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோணி மனைவி புஷ்பலதா(32). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். ஜோணி, கொத்தனார் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை ஜோணி வேலைக்கு சென்றுவிட்டார். புஷ்பலதாவும் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றுவிட்டார். மாலை 5.30 மணியளவில் வீடு திரும்பினார்.
வீட்டை திறந்து உள்ளே வந்து பார்த்தபோது பீரோ திறந்த நிலையில் இருந்தது. அதனுள் இருந்த ஒரு பவுன் செயின், ஒருபவுன் காப்பு, அரை பவுன் மோதிரம், இரண்டு கிராம் எடையுள்ள 3 மோதிரம் என்று மொத்தம் மூன்றே கால் பவுன் நகைகள் மற்றும் மகனின் ஒரு ஜோடி புது துணியும் காணாமல் போயிருந்தது. திருட்டுபோன பொருட்களின் மதிப்பு a73 ஆயிரம் ஆகும். வீட்டின் பின் பக்க ஜன்னல் வழியாக வீட்டில் நுழைந்த மர்ம ஆசாமி, திருடிவிட்டு சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக புஷ்பலதா கீரிப்பாறை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குபதிவு செய்து சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விசாரணை நடத்தி வருகிறார்.