வட மாநில தொழிலாளி கொலையில் நண்பர் மீது கொலை நோக்கமில்லாத மரணத்தை ஏற்படுத்திய பிரிவில் வழக்கு

நாகர்கோவில், மே 4 : தக்கலை அருகே உள்ள வேளிமலை எஸ்டேட்டில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மோகன் நஹிஷியா (19) மற்றும் திலேஷ் நஹேஷியா ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர். சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் திலேஷ் நஹேஷியா அங்கிருந்த கம்பால் மோகன் நஹிஷியாவை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரவர் அறைக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் இரு நாட்கள் மோகன் நஹிஷியா வேலைக்கு செல்லாததால் சந்தேகமடைந்த சக தொழிலாளர்கள் அவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு மோகன் நஹிஷியா எழும்ப முடியாமல் படுத்த படுக்கையாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மோகன் நஹிஷியாவின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் நஹிஷியா பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மோகன் நஹிஷியாவை தாக்கியதாக அவரது நண்பர் திலேஷ் நஹேஷியா மீது கொற்றிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 304 (ii) கொலை நோக்கம் இல்லாத மரணத்தை ஏற்படுத்திய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.

The post வட மாநில தொழிலாளி கொலையில் நண்பர் மீது கொலை நோக்கமில்லாத மரணத்தை ஏற்படுத்திய பிரிவில் வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: