திருவாரூர், பிப்.27: திருவாரூர் அருகே ஓடாச்சேரியில் குடிநீர் வசதி செய்து கொடுக்காததை கண்டித்து கிராம மக்கள் ஓஎன்ஜிசி நிறுவன வாகனங்களை சிறை பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.திருவாரூர் அருகே ஓடாச்சேரி ஊராட்சிக்குட்பட்ட தென்னங்குடி கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. வழக்கமாக இதுபோன்று ஓஎன்ஜிசி சார்பில் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வரும் பகுதிகளை சுற்றி நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவது வாடிக்கையாக இருந்து வரும் நிலையில் இதேபோன்று தென்னங்குடி பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து குடிநீருக்காக மக்கள் துன்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி கடந்த 2 ஆண்டு காலமாக அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.