தேசிய நெடுஞ்சாலை பணிக்கு இழப்பீடு தொகை வழங்கிய பின்பு நிலத்தை கையகப்படுத்த வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

திருப்புத்தூர், பிப்.27: தேசிய நெடுஞ்சாலை எண் 338க்காக திருப்புத்தூர் பகுதியில் கையகப்படுத்திய நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பை கூடுதலாக்க வேண்டும். இழப்பீடு தராமல் நிலத்தை கையகப்படுத்த கூடாது என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.திருப்புத்தூர் பகுதிகளான காட்டாம்பூர், தேவாரம்பூர், பிராமணப்பட்டி, சுண்ணாம்பிருப்பு, குண்டேந்தல்பட்டி, வாணியன்காடு, தென்மாபட்டு, பட்டாக்குறிச்சி ஆகிய பகுதிகளுக்குட்பட்ட நஞ்சை புஞ்சை நிலங்களை 2018ல் நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நான்குவழிச் சாலைக்காக கையகப்படுத்தியது. அப்போது சென்ட்டுக்கு ரூ.800 முதல் ரூ.3 ஆயிரம் வரை இழப்பீடு அறிவித்தது. அன்று முதல் அப்பகுதி விவசாயிகள் வழிகாட்டி மதிப்பீடு கூடுதலாக வழங்க கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு எவ்வித அறிவிப்புமின்றி வாணியன்காடு பகுதியில் நிலங்களையும் மரங்களையும், ஒப்பந்தகாரர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அங்கு வந்த விவசாயிகள் மேல்முறையீடு மனுவை காட்டி விளக்கம் கேட்டனர். பின்பு நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு பணி செய்வதாகக் கூறினர். தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் இதே பகுதியில் 2016ல் திருச்சி தேசிய நெடுஞ்சாலை 226க்கு நிலம் கையகப்படுத்தும் போது ரூ.1 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்பட்டது. தற்போது ரூ.800 வீதம் ஏக்கருக்கு 80 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுவது எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக உள்ளது. வழிகாட்டி மதிப்பை பார்க்காமல் பருவத்திற்கு ரூ.30 ஆயிரம் வரை கிடைக்கும் எங்கள் நிலங்களை கையகப்படுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த வழிகாட்டி மதிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும். எங்களுக்கு கூடுதல் இழப்பீடு கொடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் மாவட்ட நிர்வாகமும் கலந்தாலோசிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் எங்களுக்கு இழப்பீடுத் தொகை வழங்கிய பின்புதான் பணி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினர்.

Related Stories: