காரைக்காலில் ஓய்வு பெற்ற மத்திய ஊழியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலை

காரைக்கால், பிப்.26: காரைக்கால் தலத்தெருவில் ஓய்வு பெற்ற எப்.சி.ஐ (இந்திய உணவு கழகம்) ஊழியர் வீட்டில், 35 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடிவருகின்றனர். காரைக்கால் தலத்தெரு கே.எம்.ஜி நகரை சேர்ந்தவர் கலியப்பெருமாள். இவர், ஓய்வுபெற்ற எப்சிஐ (இந்திய உணவு கழகம்) ஊழியர். இவர் நேற்று முன்தினம் வெளியூர் சென்றுவிட்டு, நேற்று காலை வீடு திரும்பினார். வீட்டின் உள்ளே சென்றபோது, வீட்டின் பின்பக்க கதவு, பிரோ உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, காரைக்கால் நகர காவல்நிலைய போலீசாரிடம் இது குறித்து புகார் செய்தார். புகாரில், பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகை, ஒரு பவுன் வைர மோதிரம், ரூ.10 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போனதாக தெரிவித்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Related Stories: