மதுரை, பிப். 21: மகாசிவராத்திரியை முன்னிட்டு, மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ.800க்கு விற்பனையானது. பூஜை உள்ளிட்வைகளுக்கென பூக்கள் வாங்க பொதுமக்கள் திரண்டனர். மதுரை மாவட்டத்தில், மாசி மகாசிவராத்திரியை முன்னிட்டு, அனைத்து குலதெய்வ கோயில்கள் மற்றும் சிவலாயங்களில் இன்றிரவு முழுவதும் நான்கு கால பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு, இரவு முழுவதும் கண் விழித்து தங்களது குலதெய்வ கோயிலில் விடிய, விடிய நடைபெறும் அனைத்து கால பூஜைகளிலும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். இந்த மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயில்களில், சுவாமிக்கு பூ அலங்காரம் செய்யப்படும். பொதுமக்கள் தங்களது நேற்றிக்கடனாக பூ மாலை வாங்கி அணிவிப்பர். இதனால், நேற்று மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. விழாவிற்கேற்ப பூக்களின் வரத்தும் இருந்தது. ஆனால், பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது.