காரைக்குடி, பிப். 19: கைகொடுப்பதை தவிர்த்து தமிழ் கலாச்சாரம் படி வணக்கம் சொன்னால் வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் என மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆரோக்கிய மையம், மாவட்ட பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பதிவாளர் குருமல்லேஷ்பிரபு வரவேற்றார். துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ‘அறிவியல் வளர்ச்சி ஒருபுறம் வாழ்நாளை அதிகரித்துள்ளது. நம்மை பாதுகாக்க உதவுகிறது. விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் ஒரு நாட்டில் இருந்து உலகில் எந்த ஒரு பகுதிக்கும் எளிதில் செய்ய வசதிகள் பெருகிவிட்டன. அதன்மூலம் எங்கோ பரவும் வைரஸ் பாதிப்பு மற்ற நாடுகளுக்கும் பரவ வாய்ப்பாக அமைகிறது. அதுபோன்று தான் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் 25 நாடுகளுக்கு பரவி உள்ளது. வைரஸ் பரவுவதில் இருந்து நம்மை காத்து கொள்ள விழிப்புணர்வு அவசியம். பல்கலைக்கழகம் தத்துதெடுத்துள்ள 80 கிராமங்களிலும் மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கைகளை தினமும் சோப்பு போட்டு 15 முறை கழுவ வேண்டும். நோய் வந்தால் மருத்துவரை பார்க்க வேண்டும். மருந்து கடைகளில் மாத்திரை வாங்கி சாப்பிட கூடாது’ என்றார்.