மதுரை, பிப். 19: கேஸ் விலை உயர்வை கண்டித்து, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், மதுரையில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, கும்மியடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சமையல் எரிவாயு விலையேற்றம் மற்றும் எஸ்சி., எஸ்டி., ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு உரிமையை ரத்து செய்ய முயற்சிக்கும் மத்திய பாஜ அரசை கண்டித்து, காங்கிரஸ் சார்பில் பிப்.18ம் தேதி (நேற்று) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மதுரையில், மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. முனிச்சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநகர் மாவட்டத்தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செய்யதுபாபு, ராஜாஹசன் முன்னிலை வகித்தனர்.