திருவாரூர், பிப்.19: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் மறைந்த பூண்டி கலையரசன் உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உட்பட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். திருவாரூர் மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் மறைந்த பூண்டி கலைச்செல்வம் மற்றும் தற்போதைய மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் ஆகியோரது சகோதரரும், கொரடாச்சேரி பேரூராட்சி கழக செயலாளராகவும் இருந்து வந்தவர் பூண்டி கலையரசன் (53). இவர் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். இதனையடுத்து அவரது உடலுக்கு நேற்று காலை வரை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தி.க.பொது செயலாளர் ஜெயக்குமார் உட்பட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் கலையரசனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள இடுகாடு ஒன்றில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.