ஊத்துக்கோட்டை, பிப். 19: பெரியபாளையம் ஒன்றிய அலுவலகம் அருகில் தூர்ந்து கிடக்கும் குடிநீர் கிணற்றை தூர்வாரி சீரமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியபாளையம் ஊராட்சியில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் விவசாயிகள், மாணவ, மாணவிகள் என 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தற்போது ஊராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 60 ஆண்டுக்கு முன்பு இப்பகுதி மக்கள் எல்லாபுரம் ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அந்த கிணறு கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக சேதமடைந்த நிலையில் உள்ளது. தற்போது கிணறு தூர்ந்துவிட்டதால் உடனே தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.