ஸ்ரீபெரும்புதூர், பிப்.19: குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சி மேட்டு தெருவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் அங்கன்வாடி மையம் இயங்குகிறது. மேட்டுத்தெரு, செல்வகணபதி கோயில் தெரு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்கு படிக்கின்றனர். கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் தொடக்க பள்ளியாக இயங்கிய கட்டிடம், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், படப்பை பஜார் பகுதியில் தொடக்கப் பள்ளி மாற்றப்பட்டது. பின்னர், மேற்கூரை சிமென்ட் தளமாக மாற்றி அங்கன்வாடி மையமாக இயங்குகிறது. தற்போது, இந்த கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலைக்கு மாறியது. இதனால் மேட்டு தெரு அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. கடந்த ஆண்டு பெய்த கனமழையில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதையடுத்து ஓராண்டாக அதே பகுதியில் உள்ள வாடகை வீட்டில் செயல்படுகிறது.