மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிக்கு கூடுதலாக ₹43 கோடி ஒதுக்கீடு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

மதுராந்தகம், ஏப்.27: செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 2,600 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 5 மதகுகள் வழியாக சுமார் 7000 ஏக்கர் விவசாய நிலங்களும், ஏரியின் 2 உயர்மட்ட கால்வாய்கள் வழியாக 30 கிராம ஏரிகளுக்கு நீர் கொண்டு சென்று, அதிலிருந்து 3,000 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
இந்த ஏரியினை தூர்வாரி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில், சுமார் ₹120 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிதியின் மூலம் ஏரியை தூர்வாரி ஆழப்படுத்துதல், கரைகளை உயர்த்துதல் மற்றும் ஏரியின் கலங்கல்களில் கதவணையுடன் கூடிய உபரிநீர் போக்கி கட்டமைக்கும் பணிகள் உள்ளிட்டவை கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வருகிறது.இப்பணிகள், இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது, ஏரியின் உபரிநீர் வெளிவருவதற்கான கதவணைகள் கட்டுமானம் அமைப்பதற்கு தமிழக அரசு சார்பில் கூடுதலாக ₹43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த கதவணைகள் அமைக்கும் பணிகளுக்கு மட்டும் அடுத்த 6 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மற்றபடி பிற பணிகள் ஏற்கனவே அரசு அறிவித்ததுபோல் இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மதகுகள் வழியாக விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என மதுராந்தகம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

The post மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிக்கு கூடுதலாக ₹43 கோடி ஒதுக்கீடு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: