மொடக்குறிச்சி, பிப்.18: ஆனந்தம்பாளையம் ஊராட்சி செயலர் முறையான கணக்கு மற்றும் சொத்துக்களை ஒப்படைக்க வேண்டும் என ஊராட்சி தலைவர் மற்றும் பொதுமக்கள் தணிக்கை அலுவலரை முற்றுகையிட்டு மனு அளித்தனர். மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஆனந்தம்பாளையம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக கீதாரஞ்சனி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆனந்தம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள காயத்ரி, பதவியேற்ற நாள் முதல் இன்றுவரை ஊராட்சி செயலர் கீதாரஞ்சனியிடம் ஊராட்சி வரவு செலவு கணக்குகளை கேட்டு வருகிறார். ஆனால் இதுவரை ஒப்படைக்காமல் இருந்து வருகிறார். இதுகுறித்து பலமுறை ஊராட்சி செயலாளரிடம் கணக்கு கேட்டும் ஒப்படைக்காததால் ஊராட்சி தலைவர் காயத்ரி மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளார். மனுவின் மீது நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளார் அதன்பிறகு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தணிக்கை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டார்.