காஞ்சிபுரம், பிப்.18: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே மறைந்த தாயின் நினைவாக விவசாயி ஒருவர், தனது சொந்த செலவில் குளத்தை சீரமைத்து அப்பகுதி பொதுமக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அடுத்த குறும்பிரை கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சலை. இவரது மகன் கருணாகரன் (52). விவசாயி. காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக அவை தலைவர். வயது மூப்பு காரணமாக கடந்த ஜனவரி 29ம் தேதி அஞ்சலை இறந்தார். அவருக்கான நினைவஞ்சலி சமீபத்தில் நடந்தது.இந்நிலையில், கருணாகரன் தன் தாயின் நினைவாக, அப்பகுதியில் உள்ள குறும்பிறை குளத்தை தூர்வாரி சீரமைக்க முடிவு செய்தார். அதன்படி, சீரமைக்கப்படும் குளத்தில் தன் தாயின் படத்தை வைத்து, குடும்பத்துடன், அஞ்சலி செலுத்தினார்.
இதில் காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செயலாளர் வளையாபதி தலைமை தாங்கினார். மதிமுக மாநில துணை பொது செயலாளர் மல்லை சத்யா கலந்து கொண்டு, கருணாகரனின் தாய் அஞ்சலைக்கு அஞ்சலி செலுத்தி குளம் தூர்வாரி சீரமைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.இதுகுறித்து கருணாகரன் கூறுகையில், பொது நலன் சார்ந்த விஷயங்களில், என் தாய் அக்கறை கொண்டவராக இருந்தார். அதன் காரணமாக, நானும், சமூக நலன் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறேன். அவர் இறப்பால், அவரது நினைவாக, சமூக நலன் சார்ந்து ஏதாவது செய்ய வேண்டும் எனதோன்றியது. அதன்படி, பல ஆண்டுகளாக, மக்கள் பயன்பாடு மற்றும் பராமரிப்பு இல்லாமல் துார்ந்துள்ள ஊர் பொதுக்குளத்தை, துார் வாரி சீரமைக்க முடிவெடுத்தேன். இந்த செயல் மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கும் என்றார்.