கூடுவாஞ்சேரி, பிப். 18: ‘தினகரன் செய்தி எதிரொலியால் கூடுவாஞ்சேரியில் உழவர் சந்தை மீண்டும் திறக்கப்பட்டது.நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில், கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையோரத்தில் உழவர் சந்தை உள்ளது. பல்வேறு ஊர்களில் உள்ள விவசாய நிலங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளை கூடுவாஞ்சேரியில் உள்ள உழவர் சந்தையில் கொண்டு வந்து, குறைந்த விலையில் விற்கப்பட்டன.கடந்த சில ஆண்டுகளாக, மேற்கண்ட உழவர் சந்தை சரிவர திறக்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்த செய்தி கடந்த 11ம் தேதி தினகரன் நாளிதழில், படத்துடன் வெளியானது. இதையடுத்து, உழவர் சந்தையை வேளாண் துறை அலுவலர் வேதகிரி (பொறுப்பு), உதவி வேளாண் துணை அலுவலர் பரணிதரன் ஆகியோர் நேற்று உழவர் சந்தைக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது உழவர் சந்தையில் உள்ள அலுவலரை அழைத்து விசாரித்தனர்.