நாமக்கல், பிப்.17: நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று, 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி வாலிபர் உலக சாதனை படைத்தார். நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், நேற்று தொடர்ச்சியாக 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், நாமக்கல் அருகேயுள்ள கணவாய்பட்டியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் மோகன்ராஜ் (27), காலை 8 மணி முதல் 11 மணி வரை தொடர்ந்து 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார். மோகன்ராஜூக்கு நோபல் உலக சாதனை புத்தகத்தின் பிரதிநிதிகள், சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கி பாராட்டினர். மேலும் சிலம்பம் சுற்றுவதை பார்க்க வந்திருந்த பலரும் கைத்தட்டியும் ஆராவாரம் செய்தும் மோகன்ராஜை உற்சாகப்படுத்தினர்.