பொதுமக்கள் கோரிக்கை காரியாபட்டியில் போக்குவரத்து நெருக்கடியை ஒழுங்குபடுத்திய போலீசார்
காரியாபட்டி,பிப்.17: தினகரன் செய்தி எதிரொலியாக, காரியாபட்டியில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் அபராதமும் விதித்தனர். காரியாபட்டி நகரில் அனைத்து பகுதியிலும் சாலையோரத்தில் டூவீலர்கள், கார்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பஸ், லாரி உள்ளிட்ட மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டன. ஆவியூர், கல்குறிச்சி போன்ற ஊர்களிலும் இதே போன்ற நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து பிப்.13ம் தேதி தினகரனில் செய்தி படத்துடன் வெளியானது.
இதன் எதிரொலியாக காரியாபட்டி பஸ்நிலையம், முக்குரோடு, யூனியன் அலுவலகம் ரோடு என அனைத்து பகுதிகளிலும் எஸ்.ஐக்கள் வினோத்குமார், தமிழழகன், பிச்சைப்பாண்டி, கலைச்செல்வன், முருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார், போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்ட வாகனங்களை அப்புறப்படுத்தினர். அத்துடன் விதிமீறி சாலையில் நிறுத்தியதற்கு அபராதமும் விதித்தனர்.