காதலியுடன் குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்ய மறுத்து மிரட்டல்

புதுச்சேரி, பிப். 17: புதுச்சேரி லாஸ்பேட்டையில் கணவன், மனைவி போல் குடும்பம் நடத்தி விட்டு காதலியை திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் ரமா (27). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). டிப்ளமோ முடித்துள்ள இவர், புதுவை மரப்பாலம் தேங்காய்திட்டில் தாய்மாமாவின் வீட்டில் தங்கி, தட்டாஞ்சாவடி வழுதாவூர் சாலையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது உடன் வேலை செய்த கிருமாம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. 4 வருடமாக அவர்கள் காதலித்து வந்துள்ளனர். மேலும், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, புதுச்சேரி லாஸ்பேட்டை கெங்கையம்மன் கோயில் வீதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து ரமாவை தங்க வைத்தார். அங்கு இருவரும் கணவன், மனைவி போல் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

சமீபத்தில், ரமா, தன்னை திருமணம் செய்ய கேட்டபோது, அதற்கு பாலாஜி மறுத்து விட்டார். தொடர்ந்து வற்புறுத்தி கேட்டதால், கொலை செய்து விடுவதாக மிரட்டலும் விடுத்துள்ளார்.இது குறித்து ரமா, லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் ஏமாற்றுதல், பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து பாலாஜியை தேடி வருகின்றனர். பாலாஜி, தற்போது சென்னையில் உள்ள தனியார் பெயிண்ட் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவரை தேடி தனிப்படை போலீசார் சென்னை விரைந்துள்ளனர்.

Related Stories: