மதுரை, பிப். 13: விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்பு தானத்தால் 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா, குளத்துப்பட்டியைச் சேர்ந்த வள்ளியப்பன் மனைவி கல்யாணி (64). கடந்த 10ம் தேதி கணவருடன், இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது. இதில் நிலைதடுமாறி கணவன் மனைவி இருவரும் கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்த கல்யாணி, திருமயம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்கு பெற்று, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை மேற்கொண்ட நிலையில் கல்யாணி நேற்று மூளைச்சாவு அடைந்தார். மூளை நரம்பியல் மருத்துவர்கள, கல்யாணியின் மூளை நிரந்தரமாக செயலிழந்து அவர் நிரந்தர மூளைச்சாவு அடைந்ததை உறுதிபடுத்தினர்.