காங்கயம், பிப். 13: காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஒன்றியக் கூட்டத்தில் 7 அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழுத் தலைவர் மகேஷ்குமார் தலைமை வகித்தார். காங்கயம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் காங்கயம் ஒன்றியத்தில் உள்ள கவுசின்சிலர்கள், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் செலவினங்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.17 லட்சம் தவிர்த்து, மீதமுள்ள தொகையினை ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து மேற்கொள்வது, காங்கயம் ஊராட்சிக்கு சொந்தமான பழுதடைந்து, பழுது பார்க்க இயலாத நிலையில் உள்ள கட்டடங்களை இடித்து அகற்றுவது, அதற்கான செலவினங்களை பொது நிதியை பயன்படுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.