பவானி, பிப். 12: பவானியில் விதிமுறை மீறி திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, சூரியம்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது: பவானி-அந்தியூர் நெடுஞ்சாலைக்கு அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. தற்போது செயல்பட்டு வரும் கடைக்கு அருகில் மாணவ, மாணவியர் விடுதி உள்ளது. மேலும், புகழ்பெற்ற பண்டார அப்பிச்சி கோயில் உள்ளது. மதுக்கடையின் பின்பகுதியில் பவானி ஆறு ஓடுகிறது.
மேலும் டாஸ்மாக் கடை வழியாக செல்லும் சாலை, அபாயகரமான வளைவில் அமைந்துள்ளது.