கோவை, பிப்.11: கோவை நகரில் மேம்பாலங்களில் அதிகாலை நேரத்தில் வாக்கிங் செல்வதை தவிர்க்கவேண்டும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர். கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு நேற்று கூறியதாவது: கோவை நகரில் மேம்பாலங்களில் அதிகாலை நேரத்தில் வாக்கிங், ஜாக்கிங் செல்வோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. சிலர் காதில் ஹெட்போன் மாட்டி கொண்டு செல்போனில் பாட்டு கேட்டு கொண்டே செல்கின்றனர். பின்னால் வரும் வாகனங்களை நடைபயிற்சி செய்பவர்கள் கவனிப்பதில்லை. ரோட்டில் திரும்பும் போதும் வாகனங்கள் வருவதையும், ஹாரன் அடிப்படையில் சிலர் கவனிப்பதில்லை. இதனால் விபத்து ஏற்படும் நிலையிருக்கிறது. காந்திபுரம் புதிய மேம்பாலம், கணபதி மேம்பாலம், ஒண்டிப்புதூர், சுங்கம், அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு மேம்பாலம் உள்ளிட்ட நகர் பகுதி மேம்பாலங்களில் வாக்கிங் செல்வதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும் என தெரிவித்திருக்கிறோம். நகரில் 51 சிக்னல்களை சீரமைக்க, மேம்படுத்த அரசிடம் 4.25 கோடி ரூபாய் நிதி கேட்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் சிக்னல் சீரமைப்பு பணி சிறப்பாக நடத்தப்படும். திருச்சி ரோட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. விரைவில் மேம்பால தூண்களை இணைக்க கர்டர்கள் பொருத்தப்படவுள்ளது. இந்த பணி நடக்கும் போது போக்குவரத்து மாற்றம் செய்து தரவேண்டும் என நெடுஞ்சாலைத்துறையினர் கேட்டுள்ளனர்.