சேந்தமங்கலம், பிப்.7: சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்- ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் முத்துசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது: மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற ஆசிரியர்கள் முயற்சி செய்தாலும், பெற்றோர் தங்க்ள பிள்ளைகளை இரவு 3 மணி நேரம், அதிகாலை எழுந்து 2 மணி நேரம் படிக்க சொல்ல வேண்டும். பொதுத்தேர்வு முடியும் வரை பெற்றோர் மாணவர்கள் டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். பள்ளியில் காலையில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்கு தங்களது பிள்ளைகளை தவறாமல் அனுப்ப வேண்டும். தேர்வு நெருங்குவதால் மாணவர்கள் விடுமுறை எடுப்பதை தவிர்த்து பள்ளிக்கு வர வேண்டும். மாணவர்கள் அன்றாடம் பள்ளிக்கு சென்று வருகிறார்களா என பெற்றோர்கள் பள்ளியை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள வேண்டும்.