சத்தியமங்கலம், பிப்.7: முட்டைகோஸ் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் கிலோ ரூ.3க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், தாளவாடி மலைப்பகுதியில் முட்டைகோஸ் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2500 அடி உயரத்தில் உள்ளதால் குளிர்ந்த தட்பவெப்பநிலை நிலவுகிறது. இதனால், இப்பகுதி விவசாயிகள் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், முள்ளங்கி, முட்டைகோஸ், பீட்ருட் உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடுகின்றனர்.இங்கு விளையும் காய்கறிகள் மேட்டுப்பாளையம், கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கேரள மாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தாளவாடி சுற்று வட்டார கிராமங்களான எரஹனள்ளி, திகினாரை, ஜீரஹள்ளி, கல்மண்டிபுரம், அருள்வாடி, கெட்டவாடி, தமிழ்புரம், நெய்தாளபுரம், தலமலை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நீலகிரி, சேன்டேஸ், கணேஸ் போன்ற பல்வேறு ரக கோஸ் சாகுபடி செய்துள்ளனர்.