அறந்தாங்கி, பிப். 7: அறந்தாங்கியில் பொதுப்பணித்துறை சார்பில் தாசில்தார் அலுவலக புதிய கட்டிட பூமிபூஜை நடந்தது. கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி முன்னிலை வகித்தார். பூமிபூஜையை துவக்கி வைத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் வருவாய்த்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் அறந்தாங்கியில் ரூ.2.92 கோடியில் தாசில்தார் அலுவலக புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.இந்த தாசில்தார் அலுவலகமானது 1,252 சதுர மீட்டர் பரப்பளவில் தரைதளத்தில் தாசில்தார் அறை, கணினி அறை, அலுவலக அறை, பதிவறை உள்ளிட்டவை மற்றும் முதல்தளத்தில் தாசில்தார் வழங்கல் அலுவலர் அறை, கூட்டரங்கம், பொதுமக்கள் மற்றும் பணியாளர்களுக்கு தனித்தனி கழிப்பிட வசதி உள்ளிட்டவைகளுடன் கட்டப்படவுள்ளது. புதிதாக கட்டவுள்ள தாசில்தார் அலுவலக கட்டிடம் அறந்தாங்கியின் மைய பகுதியில் உள்ளதால் பொதுமக்கள் எளிதில் சென்றுவர வசதியாக அமையும். தாசில்தார் அலுவலக கட்டிடத்தை தரமான கட்டுமான பொருட்களை கொண்டு விரைவாக கட்டி முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் கட்டிட பணிகள் 10 மாதத்துக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.