கரூர், பிப்.6: கரூர் காவிரியாற்றில் நீர்வரத்து குறைந்துவிட்டதால் கரூர் மாவட்ட ஆற்றங்கரை பகுதியில் ஓடைபோல தண்ணீர் செல்கிறது. கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வரத்து இருந்தது. அங்கு தொடர் மழை நின்றதும் நீர்வரத்து படிப்படியாக குறைந்துவிட்டது. காவிரியாற்றங்கரையில் கரூர் மாவட்ட கரைப்பகுதியானது மேடாக இருக்கிறது. இதனால் இப்பகுதியில் நீர்வரத்தின்றி காவிரியாற்றில் ஓடைபோல தண்ணீர் செல்கிறது. அக்கரைப்பகுதியான நாமக்கல் மாவட்டம் வேலூர், மோகனூர் பகுதி தாழ்வான பகுதியாக இருப்பதால் அங்கு ஓரளவு தண்ணீர் ஓட்டம் இருக்கிறது, காவரியாற்றில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெறும் 130கன அடி தண்ணீர் தான் வந்தது. ஆகஸ்டு மாதம் முதல் படிப்படியாக நீர்வரத்து கர்நாடக மழையால் அதிகரிக்க தொடங்கியது. ஆகஸ்டு 5ம்தேதி 1243கனஅடி, ஆகஸ்டு 16ம்தேதியன்று 10836கனஅடி நீர்வந்தது. செப்டம்பர் 3ம்தேதி 16590 கனஅடியாக உயர்ந்து 8ம்தேதி 47800, 9ம்தேதி 56500 கனஅடியாகி 11ம்தேதி 76100 கனஅடி என அதிகபட்ச அளவை எட்டியது. பின்னர் படிப்பாக குறைந்தது.