வேலூர், பிப்.6: தமிழக அரசு அருங்காட்சியகங்களை மேம்படுத்துவது தொடர்பாக அறிவதற்கு காப்பாட்சியர்கள் 6 பேர் முதல்கட்டமாக கொல்கத்தா அருங்காட்சியகம் சென்றுள்ளனர். தமிழகத்தில் சென்னை எழும்பூர் தலைமை அருங்காட்சியகத்தை தவிர கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, வேலூர், விருதுநகர் உட்பட 20 அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன. இதில் நுழைவுக்கட்டணமாக உள்நாட்டை சேர்ந்தவர்களுக்கு ஒருவருக்கு ₹5 கட்டணமாகவும், வெளிநாட்டவர்களுக்கு ₹100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அருங்காட்சியகங்களில் தொன்மை சின்னங்கள், பழங்கால கற்சிலைகள், உலோக சிலைகள், கல்வெட்டுக்கள், நடுக்கற்கள், பழங்கால நாணயங்கள், ஓவியங்கள், பதப்படுத்தப்பட்ட உயிரினங்கள், ஓவியங்கள், தாவரங்கள், ஆயுதங்கள், கற்கால ஆயுதங்கள், கலை பொருட்கள் என காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை வரலாற்று ஆர்வலர்கள் மட்டுமின்றி, உள்ளூர், வெளியூர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.