பழநி, பிப்.6: தைப்பூச பாதயாத்திரை பக்தர்களின் வருகை எதிரொலியாக நாளை முதல் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை நடக்கிறது. நாளை மறுநாள் தைப்பூச தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சிகளைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். நாளை முதல் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவர். இதுபோன்ற காலங்களில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.