நாகை,பிப்.4: உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேக தினத்தில் தமிழகம் முழுவதும் தமிழக அரசு பொதுவிடுமுறை அறிவிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி நாகை மாவட்ட பொதுச் செயலாளர் பார்த்திபன் மனு கொடுத்துள்ளார். நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் கலெக்டர் பிரவீன்பிநாயர் தலைமையில் நேற்று நடந்தது.இதில் வந்த மனுக்கள் விபரம்:பார்த்திபன்(இந்து மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர்): ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில். இந்த கோயில் கும்பாபிஷேகம் நாளை(5ம் தேதி) நடைபெறுகிறது. இதை காண்பதற்கு உலகின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டு தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்து காட்டாக திகழும் தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேக தினத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பங்கேற்க வசதியாக தமிழக அரசு அன்றை தினம் பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.